காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறையும், குறையும் கலந்து உள்ளது என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சியானது காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியிலுள்ள ஓரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக அரசில் நிறையும், குறையும் கலந்து உள்ளது. ஆணவக் கொலை, விசாரணைக் கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன.
சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இவர்களை ஒடுக்கவும், சட்டம் ஒழுங்கை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு 50, 50 என மதிப்பெண் அளிக்கலாம்.
ஆணவக் கொலைகள் நடப்பதற்கு முக்கிய காரணம் சாதிவெறிதான். பெரியார், பாரதியார் போன்றோர் எவ்வளவோ கருத்துகளை எடுத்துக் கூறினாலும் சாதி வெறி இன்னும் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்த விவகாரத்தில் அரசையோ, தனி நபர்களையோ குறை கூறுவதை விட ஒட்டு மொத்தமாக மக்களின் மனநிலை மாறினால் மட்டுமே முடியும்.முதல்வர் ஸ்டாலினை, அவர் உடல் நலம் சரியில்லாததால் சந்தித்தோம். இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, தேமுதிக பொருளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக இளைஞரணி செயலர் விஜயபிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் வந்த தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா அவரது கணவர் விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.