லண்டன்: முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2-2 என டிரா செய்தது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 374 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 111, ஜோ ரூட் 105 ரன்கள் விளாசினர். ஜேமி ஸ்மித் 2, ஜேமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
கைவசம் 4 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் 2 பந்துகளையும் ஜேமி ஓவர்டன் பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த ஓவரில் ஜேமி ஸ்மித் (2) மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காத நிலையில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. இதையடுத்து கஸ் அட்கின்சன் களமிறங்கினார். முகமது சிராஜ் தனது அடுத்த ஓவரில் ஜேமி ஓவர்டனை (9) எல்பிடள்யூ முறையில் வெளியேற்றினார்.
இதையடுத்து ஜோஷ் டங்க் களமிறங்க மறுமுனையில் கஸ் அட்கின்சன் ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தார். 83-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, ஜோஷ் டங்கை (0) ஸ்டெம்புகள் சிதற வெளியேற்றினார். அப்போது 9 விக்கெட்களை இழந்திருந்த இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது.
கடைசி வீரராக முதல் இன்னிங்ஸில் தோள்பட்டையில் காயம் அடைந்திருந்த கிறிஸ் வோக்ஸ் களமிறங்கினார். இடது கை முழுவதுமாக உடலுடன் இணைத்து கட்டப்பட்ட நிலையில் வலது கையில் மட்டையை பிடித்தபடி கிறிஸ்வோக்ஸ் களத்துக்குள் புகுந்தார். சிராஜ் வீசிய 84-வது ஓவரின் 2-வது பந்தை கஸ் அட்கின்சன் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இதை ஆகாஷ் தீப் எல்லைக்கோட்டுக்கு அருகே பிடிக்க முன்றார். ஆனால் அவரது கையில் பட்டு பந்து எல்லை கோட்டை தாண்டியது.
இந்த ஓவரை முழுமையாக எதிர்கொண்ட கஸ் அட்கின்சன், பிரசித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரிலும் கிறிஸ் வோக்ஸுக்கு ஸ்டிரைக் கொடுக்காமல் சமாளித்தார். தொடர்ந்து முகமது சிராஜ் 143 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய யார்க்கர் பந்தால் அஸ் அட்கின்சன் ஆஃப் டெம்ப் சிதற போல்டானார்.
முடிவில் இங்கிலாந்து அணி 85.1 ஓவரில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கஸ் அட்கின்சன் 29 பந்துகளில், 17 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 30.1 ஓவர்களை வீசி 6 மெய்டன்களுடன் 104 ரன்களை வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-2 என சமனில் முடித்தது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பர்மிங்காமில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. எனினும் லார்ட்ஸில் நடைபெற்ற 3-வது போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது.
இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 விக்கெட்கள் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகனாக தேர்வானார். ஒட்டுமொத்தமாக அவர், இந்த தொடரில் 23 விக்கெட்களை வேட்டையாடி அசத்தினார். இந்திய அணியில் தொடர் நாயகன் விருது கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவர், இந்த தொடரில் 754 ரன்கள் வேட்டையாடி இருந்தார். இங்கிலாந்து அணியில் தொடர் நாயகன் விருது ஹாரி புரூக்குக்கு (481 ரன்கள்) வழங்கப்பட்டது.
கற்றுக்கொண்ட பாடம் என்ன? – இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “இரு அணிகளும் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இறுதி நாட்களில் முடிவு தெரியாமல் வந்தோம், இரு அணிகளும் தங்கள் முதல் கிரேடு ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிராஜ் மற்றும் பிரசித் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது, கேப்டன்சி எளிதாகத் தெரிகிறது. கடைசி நாளில் நாங்கள் பதிலளித்த விதம் அற்புதமாக இருந்தது. நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம், நேற்று கூட, நாங்கள் அழுத்தத்தில் இருந்ததை அறிந்தோம்.
சிராஜ் ஒரு கேப்டனின் கனவு. அவர், வீசிய ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும் தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தார். தொடரை 2-2 என நிறைவு செய்தது என்பது ஒரு நியாயமான பிரதிபலிப்பு. இது இரு அணியினரும் எவ்வளவு ஆர்வத்துடன் விளையாடினார்கள், எவ்வளவு சிறப்பாக விளையாடினார்கள் என்பதைக் காட்டுகிறது.
இந்தத் தொடரில் சிறந்த பேட்டராக இருப்பதே எனது நோக்கமாக இருந்தது, அந்த வகையில் எனது செயல் திறன் திருப்திகரமாக இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும், மன ரீதியாகவும் எப்படி செயல்படுகிறோம் என்பதில் அனைத்தும் உள்ளது. இவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. கடந்த ஆறு வாரங்களிலிருந்து கற்றுக்கொண்ட விஷயம் ஒன்றுதான். அது எப்போதும் ஆட்டத்தை விட்டுதரக்கூடாது என்பதுதான்” என்றார்.
முதன் முறையாக..: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம், வெளிநாட்டு மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று தனித்துவமான சாதனை படைத்துள்ளது.