சென்னை: பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை, நந்தம்பாக்கத்தில் பயணிகள் வாகன கண்காட்சி நடைபெற்றது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் மோசஸ், கபில் ப்ரீத்தம், ஹரிஷ், கிஷோர் ஆகியோர் தங்களது கண்டுபிடிப்பான பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுநர்களை கண்காணிக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அழுத்தம் மூலம் உணரும்: இது தொடர்பாக குழுவைச் சேர்ந்த மூன்றாமாண்டு கணினி பொறியியல் அறிவியல் மாணவர் ஜான் மோசஸ் கூறியதாவது: எங்களது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, பேருந்து இயக்கத்தில் ஓட்டுநருக்கு லேசான மயக்கம் போன்றவை ஏற்பட்டால் தானாகவே வேகத்தை குறைத்து, சாலையோரத்தில் பேருந்து நிறுத்தப்படும். உடனடியாக பேருந்து உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
ஓட்டுநருக்கு ஏற்படும் உடல் நலப் பிரச்சினையை அவர் பேருந்து உபகரணங்கள் மீது செலுத்தும் அழுத்தத்தின் அளவை வைத்து உணரும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரேக் எப்போது செயலிழக்கும் என்பதை ஓராண்டுக்கு முன்னதாகவே அறிவிக்கும் வகையில் பேருந்தின் அனைத்து அமைப்பையும் முழுமையாக கண்காணிக்கும். இவை பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன தொழில்நுட்பத்தை பழைய பேருந்துகளில் பொருத்த ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். புதிய பேருந்துகளில் பொருத்துவதற்கான செலவு சற்று குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார் மற்றொரு கண்டுபிடிப்பு குறித்து மாணவர் கபில் ப்ரீத்தம் கூறும்போது, “அதிநவீன கேமரா கொண்ட ரோவர் அமைப்பு, பேருந்தின் அடியில் சென்று பழுதை கண்டறியும். மேலும், அதை சரிசெய்ய அருகில் உள்ள பராமரிப்பு மையத்துக்கும் ஓட்டுநருக்கு வழிகாட்டும்” என்றார்.