தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தூத்துக்குடியில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ (டி.என்.ரைசிங்) என்னும் தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாடு திருச்செந்தூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தமிழக அரசின் தலைமை செயலர் நா.முருகானந்தம் தலைமை வகித்தார்.
கனிமொழி எம்.பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.32,554 கோடி முதலீடு மற்றும் 49,845 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ரூ.265.15 கோடி முதலீடு மற்றும் 1,196 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இதேபோல், ரூ,1,230 கோடி முதலீடு மற்றும் 3,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 4 முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதுபோல டாட்டா பவர் சோலார், இன்பினிஸ்க், பினக்கிள் இன்போடெக் ஆகிய மூன்று நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதன்மையாக கொண்டு நம்முடைய திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்புகளை மிகச் சிறப்பான வகையில் உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்களுடனான சந்திப்புகளையும் தொடர்ச்சியாக நாம் நடத்திக்கொண்டு வருகிறோம்.
சென்னை, கோவை, தூத்துக்குடி, துபாய், ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின் என்று பல இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து இருக்கிறோம். 2024-ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறார்.
பல நாடுகளுக்கு சென்று, வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து குவிக்கிறார். சொன்னதைச் செய்வோம் என்பதுதான் நம்முடைய அரசின் குறிக்கோள். துறைமுகமும், இயற்கை வளமும் திறமையான மனிதவளமும் நிறைந்திருக்கும் இந்த மாவட்டத்தை தொழில்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்தெடுத்துக் கொண்டு இருக்கிறோம். தென் மாவட்டங்களில் அமைக்கப்படும் தொழிற் பூங்காக்கள், தொழிற்சாலைகளுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, எப்போது வேண்டும் என்றாலும் உடனே தொழில் தொடங்கலாம் என்ற தயார் நிலையில், இந்த தொழிற் பூங்காக்கள் தயாராக இருக்கிறது. நீர்த் தேவையை நிறைவு செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையும் அமைக்கப்பட்டு வருகிறது. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத, தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம். தென் தமிழ்நாடு பற்றி தலைவர் கலைஞர் கண்ட கனவு இன்றைக்கு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்த உடனே, தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தோம். அதை அடைய, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ள கூடிய உயர் தொழில் நுட்ப முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.
உயர் தொழில்நுட்பம் சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி, மின்வாகனங்கள் உற்பத்தி, சோலார் செல்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, தகவல் தரவு மையங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் முன்னேறுவதற்கு அதில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
அதிக அளவிலான உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் கொண்ட இந்த துறைகள் மூலமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்திச் சூழலையும் மேம்படுத்த முடியும். அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளை வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் அமைப்பதால், அந்த வட்டாரத்து மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும்.
அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற பரந்த நோக்கத்தோடு இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி துறைமுகம் இருக்கிறது. அதனால்தான் முதலீடுகளும் தூத்துக்குடியை நோக்கி இன்றைக்கு அணிவகுத்து வந்து கொண்டு இருக்கிறது.
தூத்துக்குடி பகுதியை ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக’ உருவாக்கும் வகையில், பல்வேறு பசுமை ஹைட்ரஜன், சோலார் மின்உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட உற்பத்தி திட்டங்களை, தூத்துக்குடி மற்றும் நெல்லை பகுதிகளில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எடுத்து வரும் பெரு முயற்சிகளின் பலனாக, கடந்த நான்கு ஆண்டுகளில், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 348 கோடி அளவுக்கு, உறுதி செய்யப்பட்ட முதலீடு, 32 லட்சத்து 28 ஆயிரத்து 945 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈர்த்து இருக்கிறோம்.
வின்ஃபாஸ்ஸ்ட் திட்டம் மூலமாக, மின் வாகனத் துறைக்கான மையமாக தூத்துக்குடி உருவெடுத்து வரும் அதே நேரத்தில், மின்னணுவியல் துறைக்கான மையமாகவும் தூத்துக்குடி மாறப் போவது உறுதி. நம்முடைய திராவிட அரசு மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, தொழில் தொடங்கும் உங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் தொடர்ந்து நிச்சயமாக வழங்குவோம்.
4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி, நம்முடைய இளைஞர்களின் திறனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளுக்கும் ஊக்கமளித்து பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ‘எந்த விதமான தொழிற்சாலை அமைத்தாலும், அதற்கான திறன்கொண்ட பணியாளர்கள் இங்கு இருக்கிறார்கள்’ என்று தொழிலதிபர்கள் என்னிடம் அடிக்கடி சொல்கிறார்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் இருக்கிறது. உங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள்.
கடின உழைப்பால் இந்த வளர்ச்சியை, வெற்றியை நாம் ஈட்டி இருக்கிறோம். இது நீடிக்க வேண்டும், மேலும் பெருக வேண்டும். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இந்த மாநாட்டுக்கு ‘தமிழ்நாடு ரைசிங்’ என்று பெயர் வைத்து உள்ளார். பொருத்தமான பெயர் தான். என்னைப் பொறுத்தவரையில், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு தொடர்ந்து எழுச்சி பெறும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
மாநாட்டில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், அமிர்தராஜ், சண்முகையா, எழிலன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலளர் அதுல் ஆனந்த், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலளர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, தொழில் வணிக ஆணையர் இல.நிர்மல்ராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் பு.அலர்மேல்மங்கை, தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கே.அழகுசுந்தரம், ஆர்.இ.ஜி நிறுவன தலைவர் டெய் வெய்லின், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.