சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும், வழக்கை சிபிஐ- க்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், வழக்கில் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுடன் நெருக்கமான செல்வப்பெருந்தகையிடம் விசாரணை நடத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கப்படவில்லை எனவும், உண்மையை வெளிக்கொண்டு வராமல் அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ரவுடிகள் என்பதால் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணை வந்தபோது, இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல் துறை உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்