கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை 14 நாடுகளைச் சேர்ந்த அயலக தமிழர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பிரான்ஸ் ஜெர்மன், மலேசியா, கன்னடா, மியான்மர், இலங்கை, ஃபிஜி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 அயலக தமிழர்கள் இன்று (ஆக.4) காலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பேருந்து மூன்றில் சிதம்பரம் வந்தனர். பின்னர் அவர்கள் நடராஜர் கோயிலுக்குச் சென்றனர். அங்கே, கோயில் கட்டிடக் கலைகள், சிற்பங்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து உலகுக்கு தேவாரம் திருவாசகம் கிடைக்கப்பெற்ற இடத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தனர். அங்கிருந்த தங்கத்தால் ஆன கோபுரம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி, முக்குருணிவிநாயகர் கோயில் ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலின் நான்கு கோபுரங்களையும் கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கும்பகோணம் அருகே நாதஸ்வரம் தயார் செய்யும் இடத்தை பார்வையிட புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து அவர்கள் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கோயிலுக்கும் செல்கின்றனர்.
மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கண்ணன், அயலக தமிழர்கள் நல மற்றும் மறுவாழ்வு ஆணையர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ‘வேர்களைத் தேடி’ என்ற இந்த பயணம் அயலகத் தமிழர்கள், தமிழக கலாச்சாரம், கட்டிடக் கலை, முக்கிய நீர்நிலைகள், பழம்பெரும் கோயில்கள், பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்தப் பயணத்தை,வரும் 15 ஆம் தேதி வரை 14 மாவட்டங்களில் மேற்கொள்ள உள்ளனர்.