லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக், ஜோ ரூட் ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து அணி 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து அணி 247 ரன்களும் எடுத்தன.
2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ்தீப் 66 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 53 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 53 ரன்களும் குவித்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5, கஸ் அட்கின்சன் 3, ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இதைத் தொடர்ந்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடியது.
3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 14 ரன்களில் சிராஜ் பந்தில் வீழ்ந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை பென் டக்கெட் 34 ரன்களுடனும், ஆலி போப் 0 ரன்களுடனும் தொடங்கினர்.
அபாரமாக விளையாடி பென் டக்கெட் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆலி போப் 27 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 106 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் ஜோடி சேர்ந்து இன்னிங்ஸை கட்டமைத்தனர். உணவு இடைவேளையின்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களாக இருந்தது.
ஜோ ரூட் நிதானமாக விளையாட, ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. அபாரமாக விளையாடி ஹாரி புரூக் 91 பந்துகளில் சதமடித்தார். அவர் 111 ரன்கள் எடுத்த நிலையில் ஆகாஷ்தீப் பந்துவீச்சில், சிராஜிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்-புரூக் ஜோடி 195 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் ஜோ ரூட்டுடன், பெத்தேல் இணைந்து விளையாடத் தொடங்கினார். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்களாக இருந்தது. ஜேக்கப் பெத்தேல் ஒரு ரன்னும், ரூட் 98 ரன்களும் எடுத்திருந்தனர்.
தேநீர் இடைவேளைக்குப் பின்னரும் அபாரமாக விளையாடிய ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 39-வது சதத்தை விளாசினார்.மறுமுனையில் இருந்த ஜேக்கப் பெத்தேலை 5 ரன்களில் வீழ்த்தினார் பிரசித் கிருஷ்ணா.
105 ரன்களில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரூட்டையும், வெளியேற்றினார் பிரசித் கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து 76 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 35 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜேமி ஓவர்டன் 0 ரன்னுடனும், ஜேமி ஸ்மித் 2 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
19 ரன்களில் தப்பித்த புரூக்: ஹாரி புரூக் 19 ரன்களில் இருந்தபோது பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை தூக்கியடிக்க அதை எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்த சிராஜ் பிடித்தார். ஆனால் பிடித்த வேகத்தில் சிராஜ், எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றுவிட்டார். இதனால் அது சிக்ஸராக அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஹாரி புரூக், அதிரடியாக விளையாடி சதமடித்தார்.