கொலம்பஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் நேற்று அறிவித்தார்.
ஒஹியோ மாகாணத்தின் முக்கிய வழக்குகள், மேல்முறையீட்டு வழக்குகளை மதுரா கவனிப்பார். இந்நிலையில், ‘‘அமெரிக்கர் அல்லாத ஒருவரை சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்தது ஏன்?’’ என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு அட்டர்னி ஜெனரல் டேவ் யோஸ்ட் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மதுரா தரன் அமெரிக்க குடிமகள். அவர் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய குழந்தையும் அமெரிக்கர்தான். அவருடைய பெயர்தான் உங்களுக்கு பிரச்சினையா? அப்படியானால், பிரச்சினை மதுராவிடமோ அல்லது அவரது நியமனத்திலோ இல்லை. சிறந்த சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர். உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் சிறப்பாக வாதாடியவர்’’ என்று பதில் அளித்துள்ளார்.