கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவ சிகிச்சைக்காக குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விமானி விமானத்தை சென்னையில் தரையிறக்கினார்.
கொல்கத்தாவில் இருந்து நேற்று அதிகாலை 5.05 மணிக்கு சென்னைக்கு 170 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் காலை 7.25 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சென்னையில் தரையிறங்க ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருந்ததால், சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி விவரத்தை தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமானத்தை சென்னையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டும். விமானத்தை தரை இறங்குவதற்கு வரிசையில் காத்திருக்க வைக்காமல், அவசரகால அடிப்படையில், முன்னுரிமை கொடுத்து, சென்னையில் உடனடியாக தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதனை ஏற்று சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை அவசர கால அடிப்படையில், சென்னையில் முன்னதாகவே தரையிறங்க அனுமதி அளித்தனர். மேலும், சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர், ஆம்புலன்சுடன் விமான நிலைய ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்தனர். அதன்படி, காலை 7.25 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 35 நிமிடங்கள் முன்னதாகவே காலை 6.50 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது.
விமானிக்கு பாராட்டு: உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், அவசரமாக விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதனை செய்து ஆம்புலன்ஸுக்கு மாற்றி சிகிச்சைக் காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், விமானத்தில் இருந்து மற்ற பயணிகள் கீழே இறங்கி சென்றனர். விமானியின் செயலை பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் பாராட்டினர்.