பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார்.
உடனடியாக அவரை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரித்து வருகின்றனர். அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நவாஸின் மறைவு மலையாள சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த கலாபவன் நவாஸுக்கு ரெஹானா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.