சென்னை: தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள “உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் இன்று (ஆக.2) புதிதாக தொடங்கப்படவுள்ள ‘நலம் காக்கும் மருத்துவம்’ போன்ற அரசின் திட்டங்களில் ‘உயிருடன் வாழும்’ அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி அரசு சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்களில் தமிழக முதல்வரின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை அரசி்ன் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது.
எனவே தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி, அண்ணா, பெரியார் ஆகியோரது பெயர்களையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்தக் கூடாது.
அதேபோல அரசி்ன் திட்டங்களில் ஆளுங்கட்சியின் சின்னம் மற்றும் கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும், தேர்தல் ஆணைய உத்தரவுகளுக்கும் முரணானது. ஆனால் தமிழக அரசு புதிதாக தொடங்கவுள்ள திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே தொடங்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எதிராக நாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தொடர்பாக சில விளக்கம் தேவை எனக்கோரி அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார். அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்தால் முறையாக விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.
இதைதொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விளக்கம் கோரும் மனு: தமிழகத்தி்ல் சில மாதங்களுக்கு முன்பாக அரசின் பல்வேறு சேவைகள் இல்லங்கள் தேடிச்செல்லும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது ஆக.2 (இன்று) ‘நலம் காக்கும் ஸ்டாலின் என்ற பெயரில் மருத்துவ முகாம்களை தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டது.
கடைசி நேரத்தில் அந்த திட்டத்துக்கான பெயர்களை மாற்றுவது என்பது இயலாத ஒன்று. இதனால் முகாம் தள்ளிப்போவதால் மக்கள் நலன் பாதிக்கப்படும். மேலும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை’ அரசின் திட்டங்களில் பயன்படுத்தக்கூடாது என உள்ளது.
நேரடியாக முதல்வரின் பெயரை பயன்படுத்தக்கூடாது என உத்தரவில் இல்லை என்பதால் அந்த வரையறைக்குள் முதல்வர் வருவாரா என்பது தொடர்பாகவும் விளக்கம் தேவைப்படுகிறது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் ஆக.4 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.