சென்னை: கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட மூத்த கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான வே.வசந்தி தேவி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். ராணி மேரி கல்லூரியில் பேராசிரியை பணியில் சேர்ந்த அவர், 1988 முதல் 1990-ம் ஆண்டு வரை கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றினார்.
1992 முதல் 1998-ம் ஆண்டு வரை இவர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றினார். அதன்பின் 2002 முதல் 2005 ம் ஆண்டு வரை தமிழகத்தின் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். குறிப்பாக 1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார்.
பணி ஒய்வுக்கு பின்னர் கற்றல் நலனுக்கான பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி தொடர்ந்து சேவையாற்றி வந்தார். தமிழக அரசு உருவாக்கி உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவிலும் பங்களித்திருக்கிறார். இதுதவிர வசந்தி தேவி 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விசிக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பல்வேறு கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு காரணமாக இருந்தவர்.
அதேபோல், துணைவேந்தராக பணியாற்றுகையில் பல்கலைக்கழகத்தில் சமூகக் கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக்கினார். அவர் கொண்டுவந்த முக்கியமான திட்டங்களில் ஒன்று கிராமப்புறப் பெண்களுக்கு சைக்கிள் பயிற்சி அளிக்கும் திட்டம் மிகவும் வரவேற்பை பெற்றது.
சென்னை வேளச்சேரியில் வசித்துவந்த அவருக்கு நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வசந்திதேவியின் விருப்பப்படி அவரின் உடல் கேஎம்சி மருத்துவமனைக்கு இன்று காலை தானமாக வழங்கப்பட உள்ளது.
வசந்தி தேவி மறைவு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த கல்வியாளரான பேராசிரியர் வசந்தி தேவி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். மாநில திட்டக் குழு உறுப்பினர் உள்பட பல்வேறு உயர் பொறுப்புகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியதுடன், சமூகத்தின் மீதும் பெரும் அக்கறை கொண்டவராக வசந்தி தேவி திகழ்ந்தார். அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்க இறுதிமூச்சு வரை போராடியவர்.
கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டு மென தொடர்ந்து வலியுறுத்தினார். அவரது திடீர் மறைவு கல்வித்துறை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டுக் களத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவ்வாறு கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.