சென்னை: மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவரீதியாக பணியாற்றும் தகுதியை இழக்கும் அரசுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் நிலையில், மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கொள்கை வகுத்து அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழலுக்கு எதிரான தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் நிர்வாக பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவ ரீதியாக தகுதி இழக்கும் போது அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் போது, நேரடியாக பொது போக்குவரத்து வசதிகளை வழங்கும் பணியில் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இச்சலுகைகள் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பி, இதுசம்பந்தமாக ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை செயலாளருக்கும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.