புதுடெல்லி: சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதோரா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. கேரள எம்.பிக்கள் நடத்திய இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் கலந்து கொள்ளவில்லை.
இந்த போராட்டத்தின்போது பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கேரள கன்னியாஸ்திரிகள் மீது வீண் பழி சுமத்தி அவர்களை கைது செய்துள்ளனர். போலீஸார் அவர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
சிறுபான்மையினர் மீதான இந்த வகையான தாக்குதல்களுக்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்” என்றார்.
அதேநேரம் இப்பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் கேரள எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய போராட்டத்தில் சசி தரூர் கலந்து கொண்ட நிலையில், பிரியங்கா தலைமையிலான போராட்டத்தை அவர் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.