புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்” என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் பேசினார்.
மக்களவையில் நேற்று முதல் தொடரும் ’ஆபரேஷன் சிந்தூர்’ மீதான சிறப்பு விவாதத்தில் மதுரை எம்பியான சு.வெங்கடேசன் பேசியது: “தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகுதான் அரசுக்கு தகவல் கிட்டியது பெரிய வெட்கக்கேடானது? இது, மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி சி.ஆர்.பி.எஃப்-ன் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்க போவது? அதிகாரிகளா, அமைச்சரா? ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்லுவீர்களே… உங்கள் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா?
நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எல்லா நிகழ்வுகளுக்கும் நேருவிலிருந்து, மன்மோகன் சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என்பீர்களே இப்போது யாரைக் கை காட்டுவீர்கள்? இந்த தாக்குதல் நடந்தபோது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய பிரதமர் பயணத்திட்டத்தைக் குறைத்துக்கொண்டு நாடு திரும்பினார். நேரடியாக பஹல்காமுக்கு செல்வார் காஷ்மீருக்கு செல்வார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் பிஹாரில் தேர்தல் அணிவகுப்பில் கலந்துகொள்ள சென்றார்.
எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டுந்தான் இருக்கிறது. பிரதமர் இந்த நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் என்றார். கோயிலுக்கு வாருங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் கோயிலுக்கு வர இவ்வளவு பயப்படும் பிரதமரை இப்போதுதான் பார்க்கிறோம்.
பிஹாரில் பிரதமர், ‘கற்பனையே செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்’ என்றார். ஆனால் கற்பனையே செய்ய முடியாத தாக்குதலை நடத்தியது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். எதிர்பாராத தாக்குதலால் சர்வதேச அரங்கில் மோடியின் பிம்பத்தை சிதைத்தது அவரது தாக்குதல். சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் நிறுத்த முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் உள்ளன. அதில் ஒன்றுகூட இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.
சர்வதேச அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். பாலஸ்தீன பிரச்சினையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துபோடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது இவற்றின்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்.
இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்க எதிர்க்கட்சியினரின் குழுக்களை அனுப்பினீர்கள். எதிர்க்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத்தார்கள். யாரையெல்லாம் கடந்த காலங்களில் நீங்கள் தேச துரோகிகள் என்றீர்களோ அவர்களெல்லாம் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தனர்.
ஏனெனில், எங்களுக்கு முக்கியம் தேசம்தான். எல்லா குழுவிலும் ஒன்றிரண்டு இஸ்லாமிய எம்.பிக்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு இஸ்லாமிய உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது இந்த விஷயத்தில்தான். அதையும் எதிர்க்கட்சியினர்தான் கொடுத்திருக்கிறோம்.
தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளனாக சொல்கிறேன். இந்தியாவில் ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றிகளைப் பெற்றிருக்கிறது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழ பேரரசு மட்டும்தான்.
அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா, ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்.
உங்கள் தோல்விகளை மறைக்க கடவுள்களை இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா என்பதை வேதனையோடு கேட்கிறோம். பாதுகாப்புத்துறை அமைச்சர் மறந்துகூட கர்னல் சோஃபியா குரேஷிக்கு நடந்த அவமதிப்பை, உங்கள் (பாஜக) மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா அவமரியாதையாக பேசியதை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரைஓட்டியான அதில் ஷா. அதில் ஷாவின் வீரத்தைப் பற்றி நீங்கள் ஒருமுறை கூட பேசவில்லை. ஒரு அதில் ஷா இல்லை ஆயிரம் அதில் ஷாக்கள் இருக்கிறார்கள் காஷ்மீரில். அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து நீங்கள் ஒருவார்த்தை பேசதாது வேதனையானது” என்று அவர் பேசினார்.