இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு புகழாரம் சூட்டி, கருத்து தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
‘மண்டேலா’ மற்றும் ‘மாவீரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் மடோன் அஸ்வின். இதில் ‘மண்டேலா’ படத்துக்காக தேசிய விருது வென்றுள்ளார். தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான கதையினை இறுதி செய்து வருகிறார். இப்படத்தினை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ், மடோன் அஸ்வின், ரத்னகுமார், சந்துரு உள்ளிட்டோர் நெருங்கிய நண்பர்கள்.
தற்போது ‘கூலி’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் மடோன் அஸ்வின் பணிபுரியும் விதத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “2010-11 ஆண்டுவாக்கில் எல்லாம் மடோன் அஸ்வின் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் எல்லாம் குறும்படம் என்றால் என்ன என்று கற்றுக் கொண்டிருக்கும் போது, அவன் குறும்படத்துக்கு தேசிய விருது வாங்கினான். தேசிய விருது எப்படியிருக்கும் என்பதை அவனுடைய அறையில் தான் பார்த்தேன்.
முதல் படம் இயக்கினால் தேசிய விருது படமாக தான் இருக்க வேண்டுமென விரும்பினான். 10 ஆண்டுகள் கழித்து ’மண்டேலா’ இயக்கினான். 2014-ம் ஆண்டு நான் முதல் படம் கையெழுத்திட்ட போது அவன் கதை எழுதிக் கொண்டிருந்தான். நான் 4-வது படம் இயக்கும் போதுதான் அவன் முதல் படம் வெளியானது. அஸ்வினாக என்றைக்காவது வெளியே வந்து படம் இயக்கினால் தான் உண்டு. நானெல்லாம் கடைசி பென்ச் மாணவன் ஏதாவது செய்து தப்பித்துவிடுவேன். ’மாவீரன்’ படத்தையே இவ்வளவு கமர்ஷியலா ஒரு படம் இயக்கிவிட்டோமா என்று நினைத்துக் கொண்டிருப்பான். ஆகையால் தான் அடுத்த படத்தை ரொம்ப நாட்கள் எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறான்” என்று தெரிவித்துள்ளார்.