சென்னை: 230, 110 கே.வி. மின் கம்பிகளை தொடர்ந்து கண்காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின்வாரியம் சென்னை போன்ற பெரிய நகரங்களில் புதைவட மின் கம்பிகள் வாயிலாக ஒவ்வொரு பகுதிக்கும் மின்சாரம் விநியோகம் செய்து வருகிறது.
அனைத்து மின் பகிர்மான வட்டங்களிலும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார்போல அருகாமையில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அண்மை காலமாக 230 மற்றும் 110 கே.வி. மின் கம்பிகளில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் 230, 110 கே.வி. மின் கம்பிகளை மின் பகிர்மான கழக பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மின் தொடரமைப்பு கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 230கே.வி. மின் கம்பிகள் மின்சாரம் விநியோகம் செய்யும் போது தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 110 கே.வி. கம்பிகளை மின் பகிர்மான கழக பரமரிப்பு பணியாளர் தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
சாலையில் பள்ளம் தோண்டி பழுது சரி செய்யும் நிலைக்கு செல்லாமல் கண்காணிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் காவல்துறையிடம் அனுமதி பெற்றே சாலையில் பள்ளம் தோண்ட வேண்டும். இந்த பழுது நீக்கம் பணிகள் முழுவதுமாக முடியும் வரை மின் பகிர்மான கழக அலுவலர் அந்த பகுதியில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.