சென்னை: கோவை, மருதமலையில், 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், வனத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை, சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்தப் பகுதியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்க வேண்டுமானால், வனங்களை அழிக்க வேண்டியுள்ளதாகவும், இது யானைகளின் போக்குவரத்தை துண்டிக்கும். அதன் காரணமாக விலங்குகள் – மனித மோதல்கள் அதிகரிக்கும்’ என மனுவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், முருகன் சிலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்பதால், முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அதேபோல,மற்றொரு யானைகள் வழித்தடமான ஆனைகட்டியில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை மூட உத்தரவிட வேண்டும் எனவும், கோவை – ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரம் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி, வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.