பாட்னா: பிஹார் மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓர் அரசை ஆதரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் கூறினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “குற்றங்கள் அதிகரித்து வரும் ஓர் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக உள்ளது. பிஹாரில் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு நிர்வாகம் குற்றவாளிகளுக்கு முன் முற்றிலும் அடிபணிந்துள்ளது. பிஹாரில் உள்ள மக்கள் தங்களை பாதுகாப்பாக உணரவில்லை என்றும், குற்றச் செயல்கள் ஏன் குறையவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
அரசு நிர்வாகம் குற்றங்களை தடுக்கத் தவறிவிட்டது போல் தெரிகிறது. அரசாங்கம் நிலைமையை மறைக்க முயற்சிக்கிறது அல்லது அதைக் கையாள முடியாத நிலையில் இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கம் சரியான நேரத்தில் விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது” என்றார் மேலும், “தேசிய அரசியலில் நீண்ட காலம் இருக்க நான் விரும்பவில்லை. எனது அரசியல் எப்போதும் பிஹார் மக்களுக்காகவே இருக்கும். ‘பிஹார் முதலில், பிஹாரி முதலில்’ என்பதுதான் எனது லட்சியம். பிஹார் மாநிலத்தை வளர்ந்த மாநிலங்களுக்கு இணையாகப் பார்க்க விரும்புகிறேன்.
பிஹார் அரசியலுக்கு விரைவில் திரும்புவதற்கான எனது விருப்பத்தை கட்சிக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி 100% வெற்றியைப் பெற்றது. வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் அவ்வாறே வெற்றி பெறுவோம்” என்றார் சிராக் பாஸ்வான்.
சிராக் இப்போது…. – முன்னாள் மத்திய அமைச்சரும் பிஹாரின் மறைந்த தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் தொடங்கிய கட்சி லோக் ஜனசக்தி (எல்ஜேபி). இவர், மத்தியில் எந்த கட்சி தலைமையில் ஆட்சி வந்தாலும் கூட்டணி வைத்து அமைச்சராக இருந்தவர். இவரது மகன் சிராக் பஸ்வான் இப்போது பாஜக தலைமையிலானக் கூட்டணியில் மத்திய அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆராவில் சமீபத்தில் எல்ஜேபி மாநாடு நடைபெற்றது. அப்போது எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் பேசுகையில், “நான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவேன். 243 தொகுதிகளிலும் எல்ஜேபி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பிஹார் மக்களுக்கான தேர்தலில் தனித்தொகுதி அல்லாத பொது தொகுதியில் போட்டியிடுவேன். பிஹாரை முதல் மாநிலமாக மாற்றவே இந்த முடிவை எடுக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
பிஹாரில் 5 மக்களவை எம்.பி.க்கள் கொண்ட எல்ஜேபியில் ஹாஜிபூர் தொகுதி எம்.பி.யாக சிராக் உள்ளார். தேர்தலுக்காக இவர் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) சிக்கலை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், அவரது கட்சியின் 5 எம்.பி.க்கள் ஆதரவு என்டிஏ.வுக்கு மத்தியில் மட்டும் தொடர உள்ளது.
பிஹாரில் சுமார் 5.3 சதவிகிதம் உள்ள தலித் பிரிவுகளில் ஒன்றாக பாஸ்வான் சமூகம் உள்ளது. இவர்களின் ஆதரவு பெற்ற ஒரே கட்சியாக எல்ஜேபி உள்ளது. இக்கட்சியுடன் சிறிதளவு முஸ்லிம் வாக்குகளும் உள்ளன. எனவே, எல்ஜேபி தனித்து போட்டியிட்டால், என்டிஏவுக்கு பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வாக்குகளுடன் நிதிஷ் கட்சியின் வாக்குகளையும் சிராக்கின் எல்ஜேபி பிரிக்கும் சூழல் உள்ளது. பிஹாரில் 2-வது பெரிய சமூகமாக 14.3 சதவீதத்தில் உள்ள யாதவர்கள் பெரும்பாலும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் உள்ளனர். லாலுவுடன் காங்கிரஸும் கூட்டணியில் இடம்பெறுவதால் முஸ்லிம் வாக்குகளும் மெகா கூட்டணிக்கு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் ஆய்வை நடத்தி வருகிறது. இதன்படி, உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்குரிமை பெற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.