சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜன.1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இந்த ஆண்டும் வழக்கம்போல சுருக்க முறை திருத்தமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை மேற்கொள்ள முன்னேற்பாடுகளை தொடங்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகவும் அறிகிறோம்.
ஏற்கெனவே பிஹாரில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
மேலும் வாக்காளர்கள் தங்களது இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இணைக்கப்படும் என்று கூறி, தங்களது பெயர்களை நீக்கி விடுவார்களோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
அவசரகதியில் பிஹாரில் நடைபெற்று வருவதுபோல சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்றால் பல லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து விடுபட்டு போய்விடும் ஆபத்து உள்ளது.
எனவே இத்தகைய சூழலில் தேர்தல் ஆணையம், சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுடைய கூட்டத்தைக் கூட்டி மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகளை பெற்று, அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணியை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.