வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சத்யா பன்னீர்செல்வம். ஆளும் கட்சி மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரும் சத்யாவின் வளர்ச்சியை ரசிக்கவில்லை. அதனால் தான் அவரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் என்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள்.
சத்யா பன்னீர்செல்வம் 2016-ல் பண்ருட்டி எம்எல்ஏ-வாக தேர்வான நாளில் இருந்தே அவருக்கும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. மணல் பிரச்சினையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு மல்லுக்கட்டாக மாறியதால் 2021 ஏப்ரலில் சத்யா பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்தே நீக்கினார் இபிஎஸ். அப்போதே, “எம்.சி.சம்பத், (சிதம்பரம்) எம்எல்ஏ-வான பாண்டியன், சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோரை நான் வணங்கும் சிவனும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது” என சாபம் விட்டார் சத்யா பன்னீர்செல்வம்.
இந்த நிலையில், 2021-ல் பண்ருட்டி தொகுதியை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு சத்யா பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்து மாநில மகளிரணி துணைச் செயலாளராக்கினார் இபிஎஸ். இதையடுத்து, மீண்டும் கட்சிக்குள் தனது செல்வாக்கை புதுப்பித்துக் கொண்ட சத்யா பன்னீர்செல்வம், ஜூலை 13-ம் தேதி பண்ருட்டி வந்த இபிஎஸ்ஸுக்கு கூட்டத்தைத் திரட்டி பிரம்மாண்ட வரவேற்புக் கொடுத்து அசத்தினார்.
இதைப் பார்த்துவிட்டு உற்சாகமான இபிஎஸ், “கடந்த 5 நாட்களாக 11 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், எங்குமே இவ்வளவு கூட்டம் கூடவில்லை. இந்த எழுச்சி அதிமுக வெற்றிக்கான அறிகுறி” என்று சத்யா பன்னீர்செல்வத்தையும் தன்னருகே வைத்துக் கொண்டு சொன்னார். அப்போது கூடவே நின்ற எம்.சி.சம்பத் இதற்கு எந்தவிதமான ரியாக் ஷனும் காட்டவில்லை.

இந்த நிலையில், ஜூலை 18-ம் தேதி அதிகாலையில் சத்யா பன்னீர்செல்வம் வீட்டுக் கதவை தட்டியது லஞ்ச ஒழிப்புத் துறை. வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக பதிவான வழக்கில் சோதனை என்று சொன்னதும் பதற்றமான சத்யா பன்னீர்செல்வம் மயக்கமானார். 10 ஆண்டு காலம் அமைச்சராக இருந்த எம்.சி.சம்பத்தை நெருங்காத லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே ஒருமுறை மட்டுமே எம்எல்ஏ-வாக இருந்த சத்யா பன்னீர்செல்வத்தை விடாமல் துரத்துவதன் பின்னணி என்ன என சத்யாவின் ஆதரவாளர்கள் இப்போது சந்தேகக் கொக்கி போடுகிறார்கள்.
மாவட்டத் தலைநகரான கடலூரைக் காட்டிலும், பண்ருட்டியில் இபிஎஸ்ஸை அசரவைக்கும் அளவுக்கு சத்யா பன்னீர்செல்வம் கூட்டத்தைக் கூட்டியதில் சம்பத் தரப்பு ரொம்பவே அப்செட் ஆனதாகச் சொல்லும் சத்யாவின் ஆதரவாளர்கள், “பண்ருட்டி தொகுதியைச் சேர்ந்தவர் தான் என்றாலும் சம்பத்தால் இங்கு சத்யாவை மீறி அரசியல் செய்யமுடியவில்லை. தன்னை மீறி மாவட்டத்தில் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதால் தான் 2021-ல் தேர்தலில் போட்டியிட முடியாதபடிக்கு சத்யாவை ஓரங்கட்டினார் சம்பத். அதேபோல் இப்போதும் சத்யாவின் பேரைக் கெடுக்க சம்பத் தரப்பு தான் ஏதாவது சதிவலை பின்னி இருக்குமோ என்று சந்தேகப்படுகிறோம்” என்றனர்.

இதுகுறித்து சத்யா பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு, “அதிகாலை 6 மணிக்கெல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாமல் சோதனையில் ஈடுபட்டனர். அது என்னை ரொம்பவே பாதித்ததால் தான் மயக்கமாகிவிட்டேன். கடந்த ஆண்டு நெய்வேலியில் அம்மா சிலை திறப்பு விழாவுக்கு அண்ணன் எடப்பாடியார் வந்த போது பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து உற்சாகப்படுத்தினோம். அப்போது அவரும் எங்களைப் பாராட்டினார். அதற்கடுத்த இரண்டே நாளில் இப்படித்தான் எங்கள் வீட்டுக் கதவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் வந்து தட்டினார்கள்.
இப்போது தமிழகத்தை மீட்கும் பயணத்தில் பண்ருட்டிக்கு வந்த அண்ணன் எடப்பாடியாருக்கு அதேபோல் வரவேற்பு அளித்தோம். நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைத்து வரவில்லை. அது இயல்பாகக் கூடிய கூட்டம். இது ஆளும் கட்சியினரின் கண்ணை உறுத்தியதால் எங்கள் வீட்டுக்கு மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பி இருக்கிறார்கள். இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அதை மக்களும் எங்கள் கட்சியினரும் அறிவார்கள். இதற்கு மேல் நான் கூறுவதற்கு ஏதுமில்லை” என்றார்.
எம்.சி.சம்பத்திடம் இதுகுறித்து கேட்டதற்கு, “ரெய்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரெய்டு குறித்தான தகவல்களையும் அதற்கான காரணத்தையும் பொதுச்செயலாளருக்கு தெளிவுபடுத்தி இருக்கிறோம்” என்றார்.