கும்பகோணம்: தமிழ்நாடு பிராமணர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் கார்த்திகேயன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: திருவாரூருக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியிடம், பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி, நல வாரியம் அமைக்க வேண்டும். கும்பகோணம் தொகுதியை பிராமணருக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
அவர் வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். அப்படி அவர் அறிவித்தால், தமிழகத்தில் உள்ள 45 லட்சம் பிராமணர்களும் அவருக்கு ஆதரவு அளிப்போம். அதேநேரத்தில், எங்களது கோரிக்கையை, திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால், திமுகவை ஆதரிப்பது என்பது, அப்போதுள்ள மனநிலையைப் பொறுத்ததாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2 தொகுதிகளில் வாய்ப்பு: இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி கூறும்போது, “தமிழகத்தில் அண்மைக்காலமாக பிராமணர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பிராமணர்களுக்கு உரிய அங்கீகாரம், பிரதிநிதித்துவம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, வரும் தேர்தலில் கும்பகோணம், ரங்கம், மைலாப்பூர், ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் ஏதேனும் 2 தொகுதிகளில் போட்டியிட எந்தக் கட்சி வாய்ப்பு வழங்குகிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்போம்” என்றார்.