ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது. தற்போது அடுத்த அதிரடியாக பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாக கண்காணிக்கத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளுமே கூட்டணிகளை கட்டமைப்பது, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்துவது என மும்முரம் காட்டி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக-வும் ஆண்ட கட்சியான அதிமுக-வும் மற்றவர்களை விட ஒருபடி மேலாகவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
அதேசமயம், பூத் கமிட்டி அமைத்தல், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் அதிமுக இன்னும் தேக்க நிலையிலேயே இருக்கிறது. ஒரு சில இடங்களில் மாவட்டச் செயலாளர்களே பூத் கமிட்டி விஷயத்தில் ‘பொய்க் கணக்கு’ எழுதியும் கட்சித் தலைமையிடம் பொல்லாப்பு அடைந்திருக்கிறார்கள்.
அதிமுக பூத் கமிட்டிகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது. இருந்த போதும், சரியான ஆட்கள் சிக்காத இடங்களில் 50 வயதைக் கடந்த அனுபவசாலிகளையும் பூத் கமிட்டிக்குள் திணித்து சமாளித்திருக்கிறார்கள். ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டியில் கட்டாயம் 3 பெண்கள் இருக்க வேண்டும் என்பது அதிமுக தலைமையின் உத்தரவு.
பூத் கமிட்டியில் இருப்பவர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கமிட்டிகளில் 40 வயதுக்குட்பட்டவர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற தலைமையின் உத்தரவை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் முறையாகப் பின்பற்றவில்லை என்பதால் அடுத்த கட்டமாக பூத் கமிட்டியின் செயல்பாடுகளை டிடெக்டிவ் ஏஜென்ஸிகள் மூலம் கண்காணிக்கத் தொடங்கி இருக்கிறது தலைமை. அதிமுக தேர்தல் வியூக வகுப்புக்காக பணியமர்த்தப்பட்ட நிறுவனங்களிடமே இந்தப் பொறுப்பையும் ஒப்படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்துப் பேசி அவர்களது சுயவிவரங்களை திரட்டுவதுடன், அவர்களுக்கான பிரச்சினைகளையும் கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதிமுக-வுக்கு ஆதரவு திரட்டுதல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளும் பூத் கமிட்டிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.
பூத் கமிட்டி செயல்பாடுகள் அனைத்தையும் கட்சியின் பிற நிர்வாகிகள் கண்காணித்து வந்தாலும், உண்மை நிலவரத்தை உடனுக்குடன் தலைமைக்கு தெரிவிக்கும் விதமாக டிடெக்டிவ் ஏஜென்ஸியினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அடிக்கடி பூத் கமிட்டி நிர்வாகிகளை தொடர்பு கொள்ளும் இவர்கள், தலைமைக் கழகத்தில் இருந்து பேசுவதாகச் சொல்லி பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து தகவல்களை திரட்டுகின்றனர். அவற்றை தங்களிடம் இருக்கும் தரவுகளைக் கொண்டு கிராஸ் செக் செய்து உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த அதிமுக தலைமைக்கழக பேச்சாளரான தமிழரசன், “என்னதான் ஓடி ஓடி பிரச்சாரம் செய்து மக்களை திரட்டினாலும் பூத் கமிட்டியினரின் செயல்பாடுகள் தான் தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியம். அதை உணர்ந்து 234 தொகுதிகளுக்கும் சுமார் 65 ஆயிரம் பூத் கமிட்டிகளை அமைத்து முடித்திருக்கிறது அதிமுக.
இந்தக் கமிட்டியினர் இப்போது தினமும் வீடு வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இவர்கள் சேகரித்துத் தரும் தகவல்கள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்தத் தகவல்கள் உண்மைதானா என்றுதான் இப்போது டிடெக்டிவ் ஏஜென்ஸி ஆட்கள் கிராஸ் செக் செய்கிறார்கள்.
ஜெயலலிதா காலத்தில், ஆட்சியில் இருந்தால் உளவுத் துறை மூலமாகவும் ஆட்சியில் இல்லாத போது டிடெக்டிவ் ஏஜென்ஸி மூலமாகவும் வேட்பாளர் தேர்வு, கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் ரகசிய விசாரணை நடத்துவார். அதனடிப்படையில் கட்சியினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். இப்போது பூத் கமிட்டி விஷயத்திலும் அவரது பாணியை அமல்படுத்தி இருக்கிறார் எடப்பாடியார்” என்றார்.