புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முடங்கின.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர், விமான விபத்து தொடர்பான விவகாரங்களை மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர். அதோடு பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீண்டும் மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். இதன் காரணமாக நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அதே பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.