சென்னை: குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள் கட்டுகள் ஜூலை 14-ம் தேதியே பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. எந்த மையத்திலும் பிரச்சினை ஏற்படவில்லை என டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு ஜூலை 12-ம் தேதி (சனிக்கிழமை) நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இத்தேர்வை 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர்.
இந்த சூழலில் சேலம் மாவட்டத்தில் தேர்வு மையம் ஒன்றில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் வைக்கப்பட்ட பெட்டி ஆங்காங்கே உடைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியானதால் தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜூலை 12-ம் தேதி குரூப்-4 தேர்வு முடிந்து அனைத்து விடைத்தாள்களும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சீலிடப்பட்ட இரும்பு பெட்டிகளில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு 13-ம் தேதி காலை பாதுகாப்பாக வரப்பெற்றன. இதில் எந்தவிதமான குளறுபடிகளும் நடக்கவில்லை.
விடைத்தாள்கள் அட்டை பெட்டிகளில் கொண்டுவரப்பட்டன என்ற செய்தி உண்மை அல்ல. விடைத்தாள்கள் அனைத்தும் இரும்பு பெட்டிகளில் வைத்து சீலிடப்பட்டு அவை டிஎன்பிஎஸ்சி அலுவலகம் வந்துசேரும் வரை 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.
செய்திகளில் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள், பயன்படுத்தப்பட்ட காலி அட்டைப்பெட்டிகள் மற்றும் தேர்வுக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் உபரியாக இருந்த வினாத்தாள்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் போன்றவை ஆகும். இவை தேர்வில் பயன்பட்டது போகமீதமுள்ள வினாத்தாள்கள் என்பதால் வழக்கமான நடைமுறையின்படி அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும்.
தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் அவை மாவட்ட கருவூலகங்கள் மூலமாக மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குருப்-4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.