சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்பட உள்ளன. தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரில் இருந்து பொதுமக்கள் ராமேசுவரத்துக்கு சென்று, தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவார்கள். இதன்படி, ஆடி அமாவாசை தினத்தில் ராமேசுவரத்துக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நாளை (ஜூலை 23) கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூருக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இருமார்க்கத்திலும் சேர்த்து மொத்தம் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக, www.tnstc.in மற்றும் tnstc official app மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.