சென்னை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுயஉதவி குழு பெண்கள் 2.50 கோடி பேருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடனுதவி வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்றின் செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022-23-ம் நிதி ஆண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023-24-ம் நிதி ஆண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடியும் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து, கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி கடன் வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்தது.
இதன் தொடர்ச்சியாக, நடப்பு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுயஉதவி குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை 18-ம் தேதி வரை 1.04 லட்சம் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 13.58 லட்சம் மகளிருக்கு ரூ.9,113 கோடி வங்கி கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 19.26 லட்சம் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 2.50 கோடி மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.