சென்னை: தமிழகத்துக்கு கல்வி நிதி தர மத்திய அரசு மறுக்கிறது என்று, சென்னையில் நடைபெற்ற மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம்சாட்டினார். சென்னை, ராணி மேரி கல்லூரியின் 105-வது பட்டமளிப்பு விழா, நேற்று நடைபெற்றது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற 100 மாணவிகளுக்கு பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார்.
மொத்தம் 1,424 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு புதிதாக 15 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்விக்கு முக்கியத்துவம்: அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகள் பயன்பெறும் வகையில், தமிழக அரசு புதுமைப் பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ராணி மேரி கல்லூரியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில்,மத்திய அரசு, தமிழகத்துக்கு கல்வி நிதி தர மறுத்து வருகிறது. அதோடு, பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனத்திலும் இடையூறுகளை செய்து வருகிறது.
எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவற்றை எல்லாம் உடைத்து தமிழகத்தில் கல்வியை உச்சத்துக்கு எடுத்துச் செல்வார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில், கல்லூரியின் முதல்வர் பி.உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.சாந்தி, மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி, பேராசிரியைகள், மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.