ராணிப்பேட்டை: கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் உடல்நலக் குறைவால் ( வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக ) அவதிப்பட்டு வந்தார். இதற்காக, கடந்த சில நாட்களாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து, ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் இன்று மருத்துவர்களின் பரிந்துரையின் படி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள், “வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” என்று கூறுகின்றன.