சென்னை: மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாத இந்திய அரசியமைப்பு சட்ட புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மக்களவை தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லாவுக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி. வீரமணி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை அனுப்பி இருப்பதாகவும், அதன் முகப்புரையில் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய ஆங்கிலச் சொற்கள் (Socialist, Secular) இடம்பெறவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது எதிர்க்கட்சியினரையும் அரசியல் சட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களையும் மிகவும் கொந்தளிக்க வைத்துள்ளது. இந்தியாவை சீர்குலைப்பதில் பாஜகவினர் தீவிரம் காட்டுகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்தச் செயலை அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவர் செய்கிறார் என்றால், இந்தியாவை சீர் குலைப்பதில் இவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே அடையாளம்.
மக்களவை தலைவர் அனுப்பிய புத்தகம் 1976-க்கு முன் வெளியானதன் மறு பதிப்பு என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1976-க்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தாங்கள் ஏற்கமாட்டோம் என்று ஆர்எஸ்எஸ் பகிரங்கமாக அறிவிக்கிறது – அதற்கு மக்களவைத் தலைவர் பிரச்சாரக் கருவியாக ஆகி இருக்கிறார் என்று தான் பொருள்.
இதுவரை 106 அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் வந்திருக்கின்றன. அந்தத் திருத்தங்களுடன் கூடியது தான் நடைமுறையில் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம். அதன்படி தான் நாடு நடத்தப்பட வேண்டும் என்பது தான் சட்டப்படியான சரியான நிலைப்பாடாக இருக்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்தை உதாசீனப்படுத்துவது சட்ட விரோதம்.
ஓம் பிர்லாவுக்கு சில கேள்விகளை முன்வைக்கிறேன்.
1. நாடாளுமன்ற உறுப்பினராகவும், மக்களவைத் தலைவராகவும் ஓம் பிர்லா பதவியேற்கும்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரதியை வைத்து அவர் உறுதிமொழி எடுத்தார்? நடப்பில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பேன் என்று தானே உறுதியெடுத்தார்? திருத்தங்கள் செய்யப்படாத 1950-ம் ஆண்டு அரசியமைப்புச் சட்டத்தின் படி உறுதியேற்கிறேன் என்று சொன்னாரா?
2. சமதர்மம், மதச்சார்பின்மை (Socialist, Secular) ஆகிய சொற்களை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து நீக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை (பல்ராம் சிங் மற்றும் பிறர் எதிர் மத்திய அரசு, 2020) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோரின் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மதச்சார்பின்மையையும், சமதர்மத்தையும் உறுதிப்படுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளையும் அது கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பை மீறிச் செயல்படுகிறார்களா?
3. இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் முகப்புரை என்பது அதன் அடிக்கட்டுமானம் ஆகும். அந்த அடிக்கட்டுமானத்தை அவர்கள் இடிக்கலாம் என்று முயல்கிறார்களா? அல்லது இவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் சில விஷயங்களை வைத்துக் கொள்ளவும், சிலவற்றை நீக்கிவிடவும் இது சர்வாதிகார நாடு என்று கருதுகிறார்களா?
இந்த பிரச்சினையை எளிதில் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையைச் சமூக நீதியைக் காக்க அனைத்துக் கட்சியினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும் தீவிரமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலகட்டம் இது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப் பிரச்சினையை எழுப்ப வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.