மதுரை: தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் ஓடிபி பெற தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் வீடு வீடாக செல்கின்றனர். அப்போது திமுகவினர் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு துன்புறுத்துகின்றனர். எங்கள் வீட்டிற்கு திமுகவினர் 10 பேர் வந்தனர். அவர்கள் எங்கள் அனுமதி இல்லாமல் வீட்டில் தமிழக முதல்வர் படத்துடன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டினர். பின்னர் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளை கேட்டனர்.
இந்த ஆவணங்களை தர மறுத்த போது, வீட்டுப் பெண்கள் மாதம் தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவதாக மிரட்டினர். அதோடு அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களை கேட்டு வாங்குகின்றனர். அந்த எண் கொடுக்கப்பட்டதும் ஓரணியில் தமிழ்நாடு பதிவு தகவல் வருகிறது. தொடர்ந்து ஓடிபி வருகிறது. அந்த ஓடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. மேலும் மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர். திமுகவில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசு திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பலர் விருப்பமில்லாமல் கட்டாயத்தின் பேரில் தனிப்பட்ட தகவல்களைப் பகிரவும், திமுகவில் சேர்கின்றனர்.
அரசியல் நோக்கங்களுக்காக ஆதார் தகவல்களைச் சேகரிக்க எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதார் அமைப்பு அனுமதி வழங்கவில்லை. அரசியல் பிரச்சாரத்திற்காக ஆதார் போன்ற தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவது தவறானது.
திமுகவினர் பொதுமக்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை கோருவது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் தனியுரிமை உரிமைகளை மீறும் செயலாகும். இது ஒரு குற்றச்செயலும் கூட.
எனவே, திமுகவினர் அரசியல் பிரசாரத்துக்காக பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விபரங்களை சேகரிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், திமுகவினர் பொதுமக்களிடம் இருந்து எந்தக் காரணத்துக்காகவும் ஆதார் விபரங்களை சேகரிக்க கூடாது என்றும், திமுகவினர் இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விபரங்களை உடனடியாக அழிக்கவும், பொதுமக்களிடம் திமுகவினர் சட்டவிரோதமாக ஆதார் விபரங்களை சேகரித்தது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஆதார் தலைமை செயல் அதிகாரி விசாரணை நடத்தி, திமுக பொதுச்செயலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ. டி.மரிய கிளாட் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கள் மகேந்திரன், கே. ஆர்.பாரதி கண்ணன் ஆகியோர் வாதிடுகையில் “ஆதார் எண் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன. அதனடிப்படையில் வரும் ஓடிபி எண்ணை கேட்கின்றனர். உறுப்புனர் ஆகவில்லை எனில் மகளிர் உரிமைத் தொகை போன்ற சலுகைகள் கிடைக்காது என மிரட்டுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான வீடியோ சமர்ப்பிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், “ஓடிபி எதற்காக கேட்கிறார்கள்? ஓ டி பி விபரங்களை பகிர வேண்டாமென, காவல்துறையினர் அறிவுறுத்தி, வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகையில் எதற்காக கேட்கிறார்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள், தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சி, ஓரணியில் தமிழ்நாடு எனும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்துகிறது.
தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. தனிநபர் விபரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். ஆகவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது ஓடிபி யை பெற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால் ஓ டிபி விபரங்களை கேட்கக் கூடாது என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது? என்பது குறித்தும் வழக்கு தொடர்பாகவும் மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.