மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று அதிகார நந்தியின் மீது அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இதில், தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் வளாகத்தில், திரிபுரசுந்தரி அம்பாளுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் ஆடிப்பூரம் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நிலையில், இந்தாண்டுக்கான ஆடிப்பூரம் உற்சவம் கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களின் மீது பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், உற்சவத்தின் மூன்றாம் நாளான அதிகார நந்தி உற்சவம் நடைபெற்றது.
இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் நந்தி வாகனத்தின் மீது திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும், உற்சவத்தின் ஏழாம் நாளான வரும் 25-ம் தேதி திருத்தேர் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் புவியரசு தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.