சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார் வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2024-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் பிரதி மாதம் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம, நகர்ப்புற மக்களின் இருப்பிடம் நோக்கி அரசு திட்டங்கள் சென்றடைய ஏதுவாக 10 ஆயிரம் முகாம்கள் ஜூலை முதல் அக்டோபர் வரை நடைபெற உள்ளன. சென்னையில் 400 முகாம்கள் நடைபெறும்.
மண்டல வாரியாக முகாம்: இந்த முகாம்கள் மண்டல வாரியாக நடைபெறும் என்பதால் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் மக்களுடன் முதல்வர் முகாம்கள் வரும் நவம்பர் மாதத்துக்கு பிறகு பிரதி வாரம் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.