சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடி மதிப்பில் 4-வது முனையமாக மாற்றவும், பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்கவும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
இதற்காக, தெற்கு ரயில்வேயில் நிர்வாக தரப்பில் ஒப்புதல் பெறப்பட்டு, பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடியில் 4-வது முனையமாக மாற்ற, ரயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதுதவிர,பெரம்பூர் – அம்பத்துார் இடையே 6.4 கி.மீ., துாரத்துக்கு 5,6-வது புதிய பாதை ரூ.182 கோடி ரூபாயில் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், பெரம்பூரை 4-வது புதிய முனையமாக மாற்றவும், கூடுதலாக 5, 6-வது பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால், பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் முனையங்கள் தேவைப்படுகின்றன.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில், பெரம்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. 80-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகளுக்கான அடிப்படை வசதியுடன் கூடிய, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெரம்பூரில் போதிய நிலம் இருப்பதால், இங்கு ரூ.360 கோடியில் 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. ரயில் நிலையத்தின் கூடுதல் வசதிகளுக்கான அமைவிடங்கள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்த வசதி, வணிக வளாக பகுதிகள், சுற்றுச் சுவர்கள், மேம்படுத்தப்படும் நுழைவாயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இணைத்து அனுப்பப்பட்டது. தற்போது, இந்த அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல, இங்கிருந்து ரயில்கள் இயக்க வசதியாக, பெரம்பூர் – அம்பத்துார் இடையே 5,6-வது புதிய பாதைகள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்துாரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை இயக்க முடியும்.
பெரம்பூரில் தற்போது, நான்கு நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக இரண்டு நடை மேடைகள் அமைக்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட உள்ளது. வரும் 2028-ல் இந்த புதிய முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.