இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது.
இப்போது அவர் இயக்கும் படத்துக்கு ‘கில்லர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரீத்தி அஸ்ராணி நாயகியாக நடிக்கிறார். கோகுலம் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் கனவு படமான இதில், காருக்கு முக்கியத்துவம் இருப்பதால், ஜெர்மனியில் இருந்து புதிய பிஎம்டபிள்யூ கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை தனது பிறந்த தினத்தை முன்னிட்டு எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது.