மும்பை: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை, ஸ்பான்சர்ஷிப் ஆகிய பிரச்சினைகள் காரணமாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்துவதாக ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் இத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் நடைபெறும் டி20 லீக் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன. கடைசியாக நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி பட்டம் வென்றிருந்தது.
செய்தித்துளிகள்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் பப்ளிக் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஜுவான் மானுவலை வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி விளையாடவுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள பெங்கால் அணியில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று முதல், அந்த அணியுடன் சர்வதேச டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடரில் பங்கேற்கும் அணியையும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. முதல் போட்டி இன்று கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறும். ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக உள்ளார்.