டாக்கா: பாகிஸ்தான் உடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது வங்கதேசம். வேகப்பந்து வீச்சாளர்கள் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் அணியில் மூன்று வீரர்கள் ரன் அவுட் ஆகியிருந்தனர். வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அகமது – 3, முஸ்தாபிசுர் ரஹ்மான் – 2 மற்றும் மெஹதி ஹசன் – 1 விக்கெட் வீழ்த்தினர்.
110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை வங்கதேசம் விரட்டியது. 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது வங்கதேசம். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் 39 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். தவ்ஹீத் ஹிருதோய் 36 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகன் விருதை பர்வேஸ் வென்றார்.