புதுடெல்லி: இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க 17-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தன. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி (Brahmaputra), ரஷ்யாவின் மோஸ்க்வா (Moskva) நதிகளின் பெயர்களில் இருந்து புதிய சூப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டது. படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டது.
நீர், நிலம், வான் பரப்பில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவ முடியும். கடந்த 2005-ம் ஆண்டில் கடற்படை, 2007-ம் ஆண்டில் ராணுவம், 2020-ம் ஆண்டில் விமானப்படையில் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது. 28 அடி நீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக் கூடியது. 300 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பிரம்மோஸ் ஏவுகணை 500 கி.மீ. வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 800 கி.மீ. தொலைவு தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும் இரு நாடுகள் இடையிலான போரின்போது பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை குறிவைத்து பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன. குறிப்பாக பாகிஸ்தான் விமானப் படையின் தலைமை அலுவலகமான நூர்கான் விமான படை தளம், பிரம்மோஸ் தாக்குதலில் உருக்குலைந்தது.
உக்ரைன் போரில்: இந்தியா, ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பு என்பதால் ரஷ்ய ராணுவமும் பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இந்த ஏவுகணை ரஷ்யாவில் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அதிநவீன ஏவுகணை தடுப்பு கவசங்கள் உக்ரைனில் நிறுவப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தடுப்பு கவசங்களால் ரஷ்யாவின் ‘பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்’ ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதை உக்ரைன் ராணுவமே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது.
உக்ரைன் போர் மற்றும் ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணைகளின் திறனை பார்த்து ஒட்டுமொத்த உலகமும் வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் ஏற்கெனவே பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கி, எல்லைப் பகுதிகளில் நிறுவி உள்ளது. தற்போது 17-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், கத்தார், ஓமன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், புருனே, பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசூலா, பல்கேரியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
சர்வதேச நிபுணர்கள் கருத்து: சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது: அமெரிக்காவின் ஹார்பூன் ஏவுகணைகளை ஆசிய நாடுகளிடம் விற்பனை செய்ய அந்த நாடு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஆசிய நாடுகள், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்கவே விரும்புகின்றன.
ஹார்பூன் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க முடியும். ஆனால் பிரம்மோஸ் ஏவுகணைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். ஆபரேஷன் சிந்தூரின்போது பிரம்மோஸ் ஏவுகணைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமலேயே இந்தியாவிடம் பாகிஸ்தான் பணிந்தது. கூட்டு தயாரிப்பு என்பதால் இந்தியாவால் தன்னிச்சையாக பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்ய முடியாது. ரஷ்யா ஒப்புதல் அளிக்கும் நாடுகளுக்கு மட்டுமே இந்த ஏவுகணைகளை விற்பனை செய்ய முடியும்.
எனவே பிரம்மோஸைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும் விஷ்ணு என்ற ஏவுகணையை இந்தியா சொந்தமாக தயாரித்து வருகிறது. புதிய ஏவுகணையின் சோதனை அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 2,500 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்டதாகும். இது பயன்பாட்டுக்கு வரும்போது இந்திய ராணுவத்தின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தனர்.