நியாமி: நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓர் இந்தியர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜர் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் நைஜர் நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பிறகு ராணுவத்துக்கும் அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கடந்த கடந்த 18 மாத மாதங்களில் மாதங்களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 1,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில் கடந்த 15-ம் தேதி நைஜர் நாட்டின் டோஸ்ஸோ பகுதியில் அல்-காய்தா ஆதரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய தொழிலாளர்கள் ஆவர். ஓர் இந்திய தொழிலாளரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து நைஜரில் செயல்படும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நைஜரின் டோஸ்லோ பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். ஓர் இந்தியர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். கடத்தி செல்லப்பட்ட இந்தியரை மீட்க உள்ளூர் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். நைஜரில் வாழும் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்த இந்தியர்களில் ஒருவர் கணேஷ் கர்மாலி (39) என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் ஜார்க்கண்ட் மாநிலம், போகரா பகுதியை சேர்ந்தவர் ஆவர். உயிரிழந்த மற்றொரு இந்தியர் கிருஷ்ணன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவர் தென்னிந்தியாவை சேர்ந்தவர். ஆனால் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்படவில்லை.
தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்திய தொழிலாளி, காஷ்மீரை சேர்ந்த ரஞ்சித் சிங் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் மும்பையை சேர்ந்த டிரான்ஸ்ரயில் லைட்டிங் நிறுவனத்தின் நைஜர் நாட்டின் கிளையில் பணியாற்றிவர்கள் ஆவர்.