காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கேஎஃப்சி உணவகத்தில் தற்காலிகமாக சைவ உணவு மட்டுமே தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
கேஎஃப்சி என்றதுமே பலருக்கும் சட்டென நினைவுக்கு வருவது அங்கு தயாரிக்கப்படும் ‘மொறு மொறு’ சிக்கன் உணவு வகைகள்தான். இந்நிலையில், காசியாபாத் பகுதியில் இயங்கி வரும் கேஎஃப்சி-யில் சைவ உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படுகிறது. இது தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்வர் யாத்திரை மற்றும் சாவன் மாதத்தை முன்னிட்டு சைவ உணவு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், இறைச்சி உணவு வகைகளை விற்பனை செய்யக்கூடாது என ஹிந்து ரக்ஷா தள அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களை முற்றுகையிட்டது அந்த அமைப்பு.
இந்நிலையில்தான் சைவ உணவு வகைகளை மட்டும் தற்காலிகமாக தயாரித்து வழங்கி வருகிறது காசியாபாத் பகுதியில் உள்ள கேஎஃப்சி. இது குறித்து அந்த உணவகத்தை நடத்தும் நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர். இது போன்ற சம்பவம் இனி நடக்காத வகையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.