சென்னை: திமுக கூட்டணி குறித்து விமர்சிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணி குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு யார் கொடுத்திருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் மக்களை சந்திக்கும் அவர் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசுவதை விட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது அல்லது விமர்சிப்பது என்ற நிலையில் உரையாற்றுகிறார்.
இதில் உள்ள பின்புலத்தை சாமானிய மனிதர்களாலேயே அறிய முடியும். அவராக இதைப் பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 10 நாட்களாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். அல்லது விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை நியமிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.