மதுரை: மதுரை அருகே வரதட்சணை கேட்டு மனைவியை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் காவலராக உள்ள கணவர், காவல் ஆய்வாளராக உள்ள மாமனார் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் தங்கப்பிரியா (32). பிஎஸ்சி, பிஎட் பட்டதாரி இவருக்கும், மதுரை காதக்கிணறு செந்தில்குமரன் மகன் பூபாலனுக்கும் 2018-ல் திருமணம் நடந்தது. பூபாலன் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார்.
தங்கப்பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 7 வயதிலும், 5 வயதிலும் இரு மகன்கள் உள்ளனர். இத்தம்பதியரின் குழந்தைகளுக்கு காதணி விழாவின்போது, இருவருக்கும் தலா 5 பவுன் நகைகள் போடுமாறு தங்கப்பிரியாவின் பெற்றோரிடம் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பூபாலன் அவரது மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் பூபாலன் மனைவியை தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட தங்கப்பிரியா தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தனது மனைவியை கொடுமைப்படுத்தியது குறித்து பூபாலன் தொலைபேசியில் அவரது தங்கையிடம் பேசி பகிர்ந்த ஆடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதற்கிடையில் தங்கப்பிரியாவின் பெற்றோர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘வரதட்சணை கேட்டு மகளை துன்புறுத்தியதாகவும், பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் கணவர் பூபாலன், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஆய்வாளராக பணியாற்றும் அவரது பூபாலனின் தந்தை செந்தில்குமரன், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோர் மீது 5 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ள நிலையில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்ட போலீஸார் அடங்கிய தனிப்படையினர் அவர்களை தேடுகின்றனர். ஏற்கெனவே திருப்பூர் ரிதன்யா, குமரி மாவட்டம் ஜெபிலா ஆகியோர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியபோதிலும், மதுரையில் காவல்துறை குடும்பத்திலும் வரதட்சணைக்காக தங்கப்பிரியா என்ற பெண் தாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது.