சென்னை: தமிழகத்தில் உள்ள முன்னாள், இந்நாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது பன்னிரெண்டு வாரங்களில் முடிவெடுக்க மாநில தகவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்தில் தற்போது பதவியில் உள்ள எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மற்றும் முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததாக கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை வழங்குமாறு கோரியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ததாகவும், இருப்பினும் தகவல்கள் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். பொது மக்கள் நலன் கருதி கேட்கப்பட்ட தகவல்களை தர மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏக்கள்., மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்க வேண்டுமென மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.மாலா, மேல்முறையீடு மீது பன்னிரெண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.