பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 68.
தமிழில் ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘ராஜாளி’, ‘காதல் கதை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவரது படங்களில் இடம்பெற்ற சாதி, மத, பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வசனங்கள் வரவேற்பை பெற்றன. 2011-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘வேலு பிரபாகரனின் காதல் கதை’ திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடைசியாக 2017-ம் ஆண்டு ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ என்ற படத்தை இயக்கியிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
கடைசியாக வேதிகா, யோகிபாபு நடித்த ‘கஜானா’ படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தான் இயக்கிய ‘காதல் கதை’ படத்தில் நாயகியாக நடித்த ஷிர்லே தாஸ் என்பவரை தனது 60-வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் வேலு பிரபாகரன்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வேலு பிரபாகரனுக்கு நேற்று உடல்நிலை மோசமடைந்து. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இன்று (ஜூலை 18) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, ஞாயிறு மாலை தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலு பிரபாகரன் மறைவுக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.