ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்தியரான சாபு தஸ்தகீரின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது.
மைசூர் மாவட்டத்திலுள்ள கரபுராவில் 1924-ம் ஆண்டு பிறந்தவர், சாபு தஸ்தகீர். இவருடைய 13-வது வயதில், பிரிட்டீஷ் ஆவணப்பட இயக்குநர் ராபர்ட் பிளர்டி, தான் இயக்கிய ‘எலிபன்ட் பாய்’ என்ற படத்தில் யானை பாகனாக நடிக்க வைத்தார். இதன் மூலம் கவனிக்கப்பட்ட அவர், அடுத்து ‘தி ட்ரம்’ (1938), ‘தி தீஃப் ஆஃப் பாக்தாத்’ (1940), ‘ஜங்கிள் புக்’ (1942), ‘அரேபியன் நைட்ஸ்’ (1942) உள்பட பல படங்களில் நடித்தார். 1948-ம் ஆண்டு ‘சாங் ஆஃப் இந்தியா’ என்ற படத்தில் நடித்த மர்லின் கூப்பர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைத்ததும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அந்நாட்டின் விமானப்படையில் சேர்ந்து பணியாற்றினார். அவருடைய வீரம் மற்றும் துணிச்சலுக்காக விருதையும் பெற்றுள்ளார். ஹாலிவுட் ‘வாக் ஆஃப் ஃபேமி’ல் இடம்பெற்ற முதல் இந்தியர் இவர். 1963-ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்த இவருடைய வாழ்க்கைக் கதை சினிமாவாகிறது.
அல்மைட்டி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரப்லீன் சாந்து இதன் உரிமையை பெற்றுள்ளார். அவர் கூறும்போது, “சாபுவின் கதை நேர்மையுடன் சொல்லப்பட வேண்டிய ஒன்று. அவருடைய திரைப்பயணத்தைச் சொல்வது என்பது ஒரு திரைப்படத்தை உருவாக்குவது மட்டுமல்ல , ஒரு மரபைப் பாதுகாக்கும் பொறுப்பும் இருக்கிறது” என்றார்.