புதுமுகம் எம்.நாகரத்தினம் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வள்ளி மலை வேலன்’. இதில் இலக்கியா, ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம். என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் நாகரத்தினம் தயாரித்துள்ள இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.மோகன். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வி.சேகர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் வி. சேகர் பேசும்போது, “இந்தப்படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன்தான் சீசன் போல. அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான். அதை விளம்பரப்படுத்துவதுதான் முக்கிய வேலையாக உள்ளது.
நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 திரையரங்குக்கு மேல் தரமாட்டார்கள். ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி, ஆயிரம் திரையரங்குகளில் பெரிய படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும். இது மாற வேண்டும்” என்றார்.