சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் 22-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடஙக்ளில் மழை பெய்யக்கூடும். 17-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 19-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
20-ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 21, 22 தேதிகளில் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 96 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 2 செமீ, கோவை மாவட்டம் சிங்கோனா, உபாசி, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, மதுரை மாவட்டம் புலிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.