சென்னை: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மதுரையில் செப்.4-ம் தேதி மாநில அளவிலான மாநாடு நடைபெறும். இதில் பங்கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “மதுரை மாநாட்டில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிப்போம். கட்சி நிர்வாகிகள் யாரும் எதிரணியினரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரையில் செப்.4-ம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு நடத்தப்படும். அதில் பல முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். அது வெற்றி மாநாடாகவும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் இணையும் மாநாடாகவும் இருக்கும். மதுரை மாநாட்டுக்கு தினகரன் மற்றும் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் கொள்கை, அதில் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியை துடைத்து எறிய அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். விஜய்க்கு எப்போதும் எங்கள் ஆதரவு இருக்கும். தற்போது வரை அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கட்சி தொடங்குவீர்களா, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறீர்களா, அதிமுகவை பாஜக விழுங்கி விடுமோ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எங்களைப் பொறுத்தவரை அதிமுகதான் உயிர் நாடி இயக்கம். சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக வரலாற்றை எடுத்து பார்த்தால் எத்தனையோ முதலைகள் விழுங்க பார்த்துள்ளன. ஆனால் அது நடைபெறவில்லை. அதிமுக எப்போதும் மக்கள் கட்சி’’ என்றார்.
முன்னதாக பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் பேசும்போது, “ஓ.பன்னீர்செல்வம் யார் பின்னாலும் செல்லப் போவது இல்லை. யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்த போவதில்லை. 2026 சட்டப் பேரவைத் தேர்தல் எந்த வகையில் இருக்கும் என்பது குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும்” என்றார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, தர்மர் எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.