சென்னை: தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேமுதிக சார்பில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் மேற்கொள்ள இருக்கிறார்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து ஆவடி (ஆக.4), காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை (ஆக.5), வேலூர் (ஆக.6), திருப்பத்தூர் (ஆக.7), ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி (ஆக.8), தருமபுரி (ஆக.9), சேலம் (ஆக.11), கள்ளக்குறிச்சி (ஆக.13), நாமக்கல் (ஆக.14), கரூர் (ஆக.16), பெரம்பலூர் (ஆக.17), அரியலூர் (ஆக.18), மயிலாடுதுறை (ஆக.19), கடலூர் (ஆக.20), விழுப்புரம் (ஆக.22) ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆக.23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்த பயணத்தில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் பூத் முகவர்களை நேரடியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபடுதல், ‘கேப்டனின் ரத யாத்திரை’, ‘மக்களை தேடி மக்கள் தலைவர்’ என்ற தலைப்புகளில் தொகுதி மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகளில் பிரேமலதா கலந்து கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார் என அக்கட்சியின் தலைமையகம் அறிவித்துள்ளது.