சென்னை: சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்,கோபாலசுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டது.
இதற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆக.13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்படு்ம்பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தேர்வு முறை மாற்றம்: மேலும், தேர்வர்களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்மைத்தேர்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முதல்நிலைத் தேர்வை பொருத்தவரையில் குரூப்-2,குரூப்-2 ஏ இரு தேர்வுகளுக்கும்பொதுவான தேர்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடர்பான100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். இதில் வெற்றிபெறுவோர் அடுத்தகட்ட தேர்வான முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
முதன்மைத் தேர்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2ஏ பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2 ஏ பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300. இது கணினிவழியில் நடத்தப்படும்.
முன்பு பொது அறிவு பகுதியில் பொதுதமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது புதிய தேர்வுமுறையில் அப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தேர்வு குரூப்-2 குருப் 2-ஏ இரு முதன்மைத் தேர்விலும் பொது தேர்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண் ரேங்க் பட்டியல் தயாரிக்க எடுத்துக் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் ஏமாற்றம்: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்வில் குறைந்தபட்சம் 2 ஆயிரம் காலியிடங்களாவது வரும என டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வெறும் 645 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருப்பதால அரசு ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் குரூப்-2 , குரூப்-2ஏ தேர்வில் 645 காலியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.